Monday 21 September 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க 17


தமிழ் ருசிக்கலாம் வாங்க
========================
மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
என்று திரைப்பாடலில் புதுக்கவிதை சிந்தனையை, புதிய சிந்தனையை புகுத்தியவர் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள்.
எது இல்லாத ஊரே இல்லை சொல்லுங்கள் பார்க்கலாம். நானும் யோசித்து யோசித்துப் பார்த்தேன். பிடிபடவே இல்லை.
தொடர்ந்து படிப்பதை நிறுத்திவிட்டு நீங்களும் யோசித்துப் பாருங்கள். பிறகுதான் உங்களுக்கும், “அட இது தோணலையே நமக்கு” என்று தோணும்..
எது இல்லாத ஊர் இல்லை?
சுரதா சொல்கிறார் இதோ...அதுவும் ஒரு திரைப்பாடலில்....காதல் பாடலில்.....
என்ன சொல்கிறார்?
--------------------------------------------------------------
நீலவானம் இல்ல்லாத ஊரில்லை - அன்பே
நீயின்றி நானில்லை.
-------------------------------------------------------------
அட....ஆமாம். இது நமக்குத் தோணலையேன்னு இப்ப தோணுதா உங்களுக்கு?. வானம் இல்லாத ஊர் இல்லை என்பது சாதாரண உண்மைதான். அது நமக்குத் தோணவில்லை. சுரதா எவ்வளவு அழகாக எளிமையாக சொல்லிவிட்டார் பாருங்கள்.
தாமரை, சூரியனைக் கண்டு மலரும். அல்லி, நிலவு கண்டு மலரும். தாழை மலர் எதைக் கண்டு மலரும்?
சுரதா சொல்கிறார்....
சுடர்மின்னல் கண்டு மலரும் தாழையைப் போல்....
என்று சொல்கிறார். மின்னல் கண்டு தாழை மலரும் என்கிறார்.
“எப்ப்படி ஐயா உங்களுக்குத் தெரியும்?” என்று அவரிடமே கேட்டேன். பட்டென்று அவர் சொன்ன பதில்.....
“எனக்கென்ன தெரியும்? நற்றிணையில் சொல்லியிருப்பதை நான் சொன்னேன்.
இதுதான் சுரதா அவர்களின் நேர்மை.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_