Wednesday 12 October 2016

தமிழ் பழகலாம் வாங்க 2



தமிழைத் தவறாக எழுதுவது சிலருக்கு இயல்பு. அதில் அவர்களுக்கு ஒரு சுகம் போலிருக்கிறது.
ஒரு நாளிதழின் செய்திப்பிரிவில் நான் வேலை பார்த்தபோது, நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) என நான் எழுதியிருந்ததை, எனக்கும் மேலே உயர் பதவியில் இருந்தவர், “நீரழிவு நோய்”என்று மாற்றி எழுதினார். “நீரிழிவு நோய்” என்பதுதான் சரி என்றேன்.
எப்படி என்று கேட்டார்.
இழிதல் என்றால் இறங்குதல் என்று பொருள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீர் அதிகம் இறங்கும். அதனால்தான் நீரிழிவு நோய் என்று பெயரிட்டனர் என்று விளக்கம் அளித்தேன்.
இணையத்தில் பார்க்கிறேன் என்று சொல்லி, இணையத்தில் பார்த்தார். நீரழிவு, நீரிழிவு என இரண்டு விதமாகவும் எழுதியிருந்தனர்.அதனால், நீரழிவு என்றே எழுதுங்கள் என உத்தரவிட்டார். தவறாகத்தான் எழுத வேண்டும் என்பது அவர் இயல்பு போலிருக்கு என்று நினைத்துக்கொண்டேன்.

கல்லூரியில் படிக்கும்போது ஒரு கவிதை நூல் வெளியிட்டேன். நூல் அச்சாகிக்கொண்டிருந்த அச்சகத்துக்கு, பேராசிரியர் ஒருவருடன் போனேன். அச்சக உரிமையாளர் வெளியில் போயிருந்தார். அங்கு வேலை பார்த்த சிறுவனிடம் பணம் கொடுத்து டீ, பிஸ்கட் வாங்கி வரச் சொன்னேன். வாங்கி வந்தான்.
பிஸ்கட் சாப்பிடு என்று, சிறுவனிடம் கொடுத்தேன்.
””எனக்கு வேணாம் நீ சாப்பிடு”” என்றான்.
பேராசிரியர் உடனே, “ தம்பி, அவர் உன்னைவிட எவ்வளவு மூத்தவர். நீ என்று சொல்லக்கூடாது. நீங்க சாப்பிடுங்கன்னு மரியாதையா சொல்லணும்” என்று சிறுவனிடம் கூறினார்.
அவன் சொன்னான்.....
”நீங்கன்னுதான் நான் சொன்னேன். உன் காதில் அப்படி விழுந்திருக்கு”
என்ன செய்ய முடியும். இவனைப்போலதான் அவரும் என்று நினைத்துக்கொண்டேன்
.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_